கரிசலாங்கண்ணியில் இவ்வளவு அற்புத சக்தியா....
நம்ம அன்றாட உணவில துவையலா, கடைசலா, பொறியலா இருந்துவந்த இந்த கீரை,
தற்போது மருந்தாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
கரிசலாங்கண்ணி காடுகளிலும், தோட்டங்களிலும், வேலி ஓரங்களிலும் தன்னிச்சையாக வளரும்
சிறு தாவரமாகும். நீர்வளம் மிகுந்த ஈரமான இடத்தில் படந்து வளரும். ஆறு அங்குலம் முதல் ஒன்பது
அங்குலம் வரை, கம்பிபோல் புத்தண்டு வளர்ந்து நுனியில் சிறுசுண்டைக்காய் அளவில் ஒற்றைப்பூ
பூத்திருக்கும். கரிசலாங்கண்ணி இலையைப் பச்சையாகவும், பருப்புடன் சேர்த்துக் கூட்டாகவும்,
எலுமிச்சம்பழம் சேர்த்து பச்சடியாகவும் சமைத்து உண்ணலாம். கரிசலாங்கண்ணி இலையைப்
பயன்படுத்தும் போது பழுத்த இலைகளையோ, கொழுந்துகளையோ பயன்படுத்தாமல் நல்ல
தரமான இலைகளையே பயன்படுத்த வேண்டும்.
கூந்தல் பராமரிப்பு & இளநரைக்கு தீர்வு:
மூலிகை கூந்தல் தைலம் தயாரிக்க, கரிசலாங்கண்ணி பொடி, எண்ணெய் கொதிக்க வைத்த
கலவையில் இருந்து வடிகட்டி, எண்ணெயை வடிகட்டி எடுத்த பின், அடியில் உள்ள வண்டலுடன்
தேங்காய் எண்ணெய் சேர்த்து, தலையில் தடவினால் முடி கறுத்த நிறமாக ஒரு மாதம் வரை இருக்கும்.
மெல்லிய வெள்ளை துணியில் கரிசலாங்கண்ணி பொடியை கட்டி, ஒரு பாத்திரத்தில் போட வேண்டும்.
அந்தத் துணி மூட்டை மூழ்கும் அளவுக்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி வெயிலில் காயவையுங்கள்.
எண்ணெய் கறுப்பு நிறமாக மாறும். இதைத்தொடர்ந்து தலையில் தடவி வர, இளநரை மாறி முடி கரு,
கரு என்று இருக்கும்.
ஆரோக்கியம் தரும் கரிசாலை தேனீர்:
கரிசலாங்கண்ணி மூலிகையை காய வைத்து பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். மிளகு 2,
ஏலக்காய் 1 இவற்றை பொடி செய்து, கால் தேக்கரண்டி கரிசலாங்கண்ணி பொடியுடன் கலந்தால்
ஒரு கிளாஸ் டீத்தூள் ரெடி. மொத்தமாக தயாரிப்பவர்கள் இந்த அளவை மனதில் கொண்டு, டீத்தூள்
தயாரிக்கலாம். இந்த பொடியுடன் தேவையான அளவு வெல்லம் சேர்த்து கொதிக்க வைத்தால்
மூலிகை டீ தயார். விருப்பப்பட்டால் பால் சேர்த்து கொள்ளலாம். கரிசலாங்கண்ணி பொடியுடன்
தூதுவளை பொடியையும் சேர்த்து மூலிகை டீ தயாரிக்கலாம்.
இந்த டீயை குடித்தால் வியாதி வராமல் தடுக்கும். பருவ காலங்களில் வரக்கூடிய தொற்று நோய்கள் அணுகாது.
ஒன்றரை டம்ளர் தண்ணீரில் கரிசலாங்கண்ணி தூள் சிறிதளவு கலக்கவும். அதனுடன் மிளகுத்தூள்,
சீரகத்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைத்தால், சூப் ரெடி. இத்துடன் வெங்காயம், கறிவேப்பிலை, கொத்துமல்லி, தக்காளி சேர்த்தால் சுவையாக இருக்கும்.பற்களை பாதுகாக்க கரிசாலை பல்பொடி:
கரிசலாங்கண்ணி பொடி 75 சதவீதம், கிராம்பு, கருவேலம்பட்டை, கடுக்காய், சுக்கு, வாய்விளங்கம்,
மாசிக்காய், ஆலம் விழுது, எலுமிச்சம் பழம், இந்துப்பு ஆகிய பொருட்களை சேர்த்து பொடி செய்தால்,
பல்பொடி தயார். இதை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யலாம். இந்த பல்பொடியை
உபயோகித்தால் பல் நோய்களே வராது.
கண்களைப் பாதுகாக்க கண்மை:
பெண்கள் பலவித கண்மைகளை வாங்கிப் பயன்படுத்துவதினால் கண்கள் கெட வாய்ப்பு உண்டு.
ஆதலின் கரிசலாங்கண்ணியின் மூலம் கண்மை தயாரித்து உபயோகித்தால் கண்கள் பாதுகாப்புடன்
இருப்பதுடன், கண் எரிச்சல், கண் கட்டி மற்றும் கண் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கிறது.
இதன் இலையைத் தண்ணீர் விடாமல் சாறு எடுத்துக் கொண்டு அதில் நீண்ட சுத்தமான வெள்ளைத்
துணியை ஊறப்போடவும். ஊறிய துணியை எடுத்து உலர்த்தவும்; உலர்ந்த துணியை எடுத்து மீண்டும்
சாறில் ஊறப்போடவும்; மீண்டும் உலர்த்தவும். இவ்வாறு ஐந்தாறு முறைகள் ஊறவைத்து உலர்த்திக்
கொள்ளவும். விளக்கில் விளக்கெண்ணெய் ஊற்றி அந்த விளக்கிற்கு கரிசலாங் கண்ணி சாறில்
ஊறவைத்து உலர்திய துணியை திரியாக்கி எரியவிடவும்.
எரியும் போது அதன் புகைபடும்படி ஒரு பீங்கான் தட்டைவைக்கவும். பீங்கான் தட்டில் படியும்
புகையை பத்திரமாக சிறு புட்டியில் சேகரித்து அதனைக் கண்மையாக தீட்டிக் கொள்ளுங்கள்.
உண்மையில் இதுதான் கண்களைப் பாதிக்காதகண்மை ஆகும்.
நோய்கள் வராமல் இருக்க துவையல் முறை:
கரிசலாங்கண்ணி இலையுடன் பூண்டு, வெங்காயம், புதினா, கொத்துமல்லி, மிளகாய், புளி
ஆகியவைகளை சட்டியில் போட்டு எண்ணெய் வாற்றிவதக்கித் துவையலாக அரைத்துக் கொள்ளவும்.
இதனை சூடு சோறில் போட்டு நல்லெண்ணெய் அல்லது நெய் விட்டு தினமும் சாப்பிட்டு வந்தால்
ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஆயுள் முழுக்க நோய் அண்டாது.
காமாலை நோய்:
காமாலை நோயினால் அவதிப்படுகின்றவர்கள் தினமும் காலை வெறும் வயிற்றில் இந்த
இலையைச் சுத்தமான அம்மியில் வைத்து மெழுகாக அரைத்து சிறிய எலும்மிச்சம் பழம்
அளவு எடுத்து பசும்பாலில் கலக்கிக் குடிக்கவும். தொடர்ந்து 15 நாட்கள் இவ்வாறு குடித்து
வந்தால் காமாலை நோய் குணமாகும்.
ஈரல் தொடர்பான நோய் அகல:
ஈரல் சம்பந்தப்பட்ட வியாதிகள் தோன்றினால் கேன்சர் வியாதி தோன்றக் கூடும். ஆதலின்
ஈரல் சம்பந்தமான எந்த நோயும் வராமல் பாது காத்துக் கொள்ள வேண்டும்.
நோயில்லாத ஆட்டு ஈரல் கொண்டு வந்து ஒரு சட்டியில் போட்டு மஞ்சள் பூ கரிசலாங்கண்ணியின்
இலையின் சாறு பிழிந்துவிட்டு, அதில் உப்பு, புளி, மிளகாய், கொத்துமல்லி, பூண்டு, சீரகம்
மேலும் மசால் போட்டுச் சமைத்துச் சாப்பிட்டால் ஈரல் சம்பந்தமான நோய்கள் அணுகாது.
குழந்தைகள்:
சில குழந்தைகள் மண் தின்று வயிற்றில் கட்டி இருந்து வயிறு பெருத்து கெட்டியாகிவிடும்.
அதனால் ஜீரண சக்தி சரியாக இல்லாமல் அவதிப்படும்.
இதற்கு இந்தக் கீரையை மைபோல அரைத்து தினசரி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடக்
கொடுத்தால் நாளைடைவில் குணமடையும்.